இது ஜெயகாந்தன் எழுதிய குறுநாவல். இதை படிக்கிறவர்கள் மனது அந்த ஜோசப்பாகவே மாறிப் போவீர்கள். அந்த கதாபாத்திரம் தருகிற மனநிலையிலிருந்து அத்தனை சுலபத்தில் நம்மால் மீண்டு விட முடியாது. அது தருகிற பரவசத்தில் மனது சிலிர்த்தெழுந்தாடிக் கொண்டே இருக்கும்.
பேரன்பு என்றால் என்ன என்பதை ஜோசப்பின் வாழ்க்கை நுட்பமாக உணர்த்துகிறது. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்றார் வள்ளுவர். நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என்றார் கண்ணதாசன். ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டச் சொன்னார் ஏசு. பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்றார் பாரதி. அதற்கு அர்த்தமாக இதில் வரும் முருகேசன் என்கிற ஜோசப் கதாபாத்திரம் திகழ்கிறது. இது மிக மிக சுவாரஸ்யமான கதை. தன் மனைவியின் விருப்பத்தை புரிந்து கொண்டு அவளுக்கு ஏற்படுகிற காதலை மதித்து அந்த காதலுக்குரியவனோடு ஒரு கணவனே மிகவும் இயல்பான, விசாலமாக, பேரன்போடான மனநிலையில் திருமணம் செய்து வைக்கிற சம்பவம் இந்த கதையின் அற்புதமான பல நிகழ்வுகளில் ஒன்று. அன்பின் அறம் என்ன என்பதை கலாப்பூர்வமாக இந்த நாவல் உணர்த்துகிறது.
இந்த ஒலிப்புத்தகத்தை கேட்கிறவர்கள் மனதில் நிரந்தர அன்பின் ஊற்று ஊற்றெடுக்கும். வன்மம் மறைந்து, பேரன்பு நிரந்தரமாய் குடிகொண்டு விடும்.
ஒலிகளை காட்சி ரூபங்களாக உணரச் செய்கிற புதிய மொழியை இந்த மயற்சி தனது புதிய இலக்கணமாய் கையாள்கிறது. இதில் பூனையின் சத்தம் மனதின் குற்றவுணர்ச்சியின் குறியீடாக கையாளப்பட்டிருக்கிறது. சர்ச் பெல்லின் ஒற்றை சத்தம், அதி உண்மையின் படிமமாக கையாளப்பட்டிருக்கிறது. இரட்டை சர்ச் பெல் சத்தம், இயற்கையின் ஆசீர்வதிப்பாய் கையாளப்பட்டிருக்கிறது. இப்படியான நுண்மைகளை உள்வாங்கி இதனை ரசிக்கிறபோது, முற்றிலும் புதிய பரவசம் கியாரன்டி. கேளுங்கள்..கேட்டு விட்டு அனைவரும் ஜோசப்பாகவே மாறிப் போவீர்களாக!