காதலுக்கு சாதி, மதம், மொழி, அந்தஸ்து என்று பல பிரச்சினைகள் குறுக்கே வந்து நிற்பதைத்தான் நாம் இந்தச் சமூகத்தில் கண்டிருக்கிறோம். ஆனால், இப்போதெல்லாம் பல காதல் முறிவுக்கு அந்தக் காதலர்களே காரணமாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை!
காதல் முறிவுகள் சகஜமாகிவிட்டன. சரியான 'புரிதல்' இல்லாமல் அவசரப்பட்டு காதலைச் சொல்லிவிட்டு, பழகிப் பார்த்து ஒருவரை ஒருவர் துல்லியமாகப் புரிந்துகொண்ட பிறகு வாழ்நாள் முழுவதும் அந்த அழகான அன்புப் பயணத்தைத் தொடர வாய்ப்பு இல்லை என உணர்ந்து மனம்விட்டுப் பேசி விலகுகிறார்கள் பல காதலர்கள்.
இது ஒரு வகையில் நல்லதும்கூட! எக்கச்சக்கமாக செலவு செய்து, உற்றார்-உறவினரை அழைத்து திருமணம் நடந்த பின்னர்... 'ஒத்துவரவில்லை' என்று விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் நிற்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை!
அப்படியொரு காதல் ஜோடிக்குள் ஏற்படும் பிரச்சினைகளை இந்தக் கதை அலசுகிறது. 'அவர்களுக்குள் அப்படி எந்த மாதிரியான பிரச்சினை ஏற்படுகிறது? அதற்கான தீர்வாக என்ன முடிவு செய்தார்கள்?' என்பதைச் சொல்லும் நாவலே 'காதல் முடிச்சு'
- பட்டுக்கோட்டை பிரபாகர்