சிறுவருக்காக வெளிவரும் ஒரு சிறந்த பத்திரிகை 'கோகுலம்'. அப்பத்திரிகையில் 1976 ஆம் ஆண்டு 'நீலா மாலா' என்னும் இக் கதையை எட்டு மாதங்கள் தொடர்ந்து எழுதி வந்தேன். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் படித்து மகிழ்ந்த கதை, இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.
நீலா சின்னஞ் சிறு கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஏழைச் சிறுமி, மாலா, சென்னையிலுள்ள புகழ் பெற்ற ஒரு டாக்டரின் மகள், இருவரும் வேற்றுமையின்றிப் பழகுகின்றனர். இணைபிரியாத தோழிகளாகின்றனர். இருவரின் அன்பினால் பல நன்மைகள் விளைகின்றன. அவர்களது நட்பினால் பல அற்புதங்கள் நிகழ்கின்றன.