வணக்கம்.
லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் ஆசிரியை... திருமதி கிரிஜா ராகவனிடமிருந்து, நான் சற்றும் எதிர்பார்த்திருக்காத தருணத்தில் சர்பிரைஸ் போன் கால்!!
"சொல்லுங்க மேடம்."
"வேதாஜி எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?"
"சந்தேகமே வேண்டாம். கட்டாயம் செய்கிறேன்."என்றேன்.
பெரிசாய் ஏதோ உதவி கேட்கப்போகிறார். யாரையோ பிடித்து எதையோ சாதித்துத் தர வேண்டும்போலிருக்கிறது. அந்த யாரோ எந்த உயரத்தில் இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாதே...
"எனக்கு ஒரு தொடர்கதை வேணும் வேதா. நல்ல அழுத்தமான சம்பவங்களோட நல்ல கதையா எழுதணும். 20 வாரம் வர்றமாதிரி... லேடீஸ் ஸ்பெஷலில் 4 பக்கம் வரும்படி எழுதணும்.''
இதன் பெயர் உதவியா!!
முழுத்தொகையையும் முன்பணமாகக் கொடுத்து மேலும் கமிட் செய்ய வைத்ததில் மிரண்டு போனேன். நானும் 20 அத்தியாயத்தையும் முழுக்க எழுதித் தர ஆசைதான். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் வேலைப் பளு இருந்ததால்... ஒவ்வொரு மாதமும் டெட்லைனாகிய 24ம் தேதி அதிகாலைதான் அரக்கப்பரக்க அனுப்புவேன்.
"கோவிச்சுக்காதீங்க"என்று மெயிலில் குறிப்பிட்டதற்கு
"ஐயோ வேதா. உங்களையாவது கோபிக்கறதாவது—"என்று பதறி என்னை வெட்கப்பட வைத்துவிட்டார்.
ஆக...
நீங்கள் படித்துக்கொண்டிருப்பது லேடீஸ் ஸ்பெஷலுக்காகவென்றே முழு ஈடுபாட்டுடன் எழுதிய நாவல்.
தலைப்பு வைக்க ஒரு பத்து நிமிஷம் நாங்கள் இருவரும் டிஸ்கஸ் செய்தது தனிக்கதை
வாசிப்பதற்கு மிக்க நன்றி
அன்புடன்
வேதா கோபாலன்